×

நெய்வேலி அருகே பரபரப்பு லாரி மோதி பள்ளி மாணவர் பலி உறவினர்கள் சாலை மறியல்

 

நெய்வேலி, ஜன. 26: மந்தாரக்குப்பம் அடுத்த ஆதண்டார்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(43). இவரது மகன் சதீஷ்குமார்(15). பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் நந்து என்பவருடன் நேற்று காலை 10 மணியளவில் வடலூரில் நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசன திருவிழாவிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். மீண்டும் வடலூரிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

நெய்வேலி சுரங்கம்-2 நுழைவு வாயில் அருகே சென்றபோது, நெய்வேலி நிலக்கரி சுரங்கம்-1ஏ-விலிருந்து நிலக்கரி சுரங்கம் இரண்டிற்கு நிலக்கரியை ஏற்றி சென்ற லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சதீஷ்குமார் மீது லாரி ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவல் அறிந்த சதீஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பவ இடத்திற்கு வந்து கடலூர்-விருத்தாசலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் போலீசார் வந்து சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலிலை கைவிட்டனர். இதை தொடர்ந்து சதீஷ்குமார் உடலை போலீசார் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா என்பதால், மறியல் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post நெய்வேலி அருகே பரபரப்பு லாரி மோதி பள்ளி மாணவர் பலி உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Neyveli ,Ravichandran ,Adantarkollai village ,Mandharakuppam ,Satish Kumar ,Nandu ,Vadalur ,Dinakaran ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...