×

பல்கலை. நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்ட எதிர்த்து மறியல் பைக்கில் அமர்ந்தபடி மாணவியின் தலைமுடியை இழுத்து சென்ற போலீசார்

திருமலை: பல்கலைக்கழக நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்த மாணவியின் தலைமுடியை பைக்கில் அமர்ந்தபடி போலீசார் இழுத்து சென்ற வீடியோ வைரலாகி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ராஜேந்திர நகரில் உள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று ஏபிவிபி மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்கள் திடீெரன சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறியும் அவர்கள் செல்லாததால் ஏபிவிபி பொதுச்செயலாளரான ஜான்சி என்ற மாணவியை பெண் காவலர்கள் இருவர் பைக்கில் அமர்ந்தபடி அவரின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர்.

இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாக மாறியது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட பெண் காவலர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று ஏபிவிபி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தை கடப்பதற்குள் மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஏபிவிபி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி. கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் ஆணையம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

The post பல்கலை. நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்ட எதிர்த்து மறியல் பைக்கில் அமர்ந்தபடி மாணவியின் தலைமுடியை இழுத்து சென்ற போலீசார் appeared first on Dinakaran.

Tags : University ,Tirumala ,Agricultural University ,Rajendra Nagar, Telangana ,
× RELATED மாணவ ஊரக வேளாண் பணி