சிவகாசி, ஜன. 25: சிவகாசி அருகே தொழிலதிபர் வீட்டில் 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரம் பொதிகை நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (68). டிரேடிங் கம்பெனி நடத்தி வருகிறார். மனைவி கீதா. 2 மகன்கள் வெளியூர்களில் உள்ளனர். ஜெகநாதன், மனைவியுடன் 3 தினங்களுக்கு முன் வெளியூர் சென்று விட்டு நேற்று மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
The post சிவகாசி அருகே தொழிலதிபர் வீட்டில் 30 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.