×

சென்னை பக்தர் மாரடைப்பால் சாவு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த

திருவண்ணாமலை, ஜன.25: திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த சென்னை சேர்ந்த பக்தர் வீடு திரும்ப பஸ் நிலையத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். சென்னை கொளத்தூர் வெற்றி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி(50). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று சென்னையில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியாக வந்திருந்தார். கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு, நேற்று மாலை சென்னை செல்வதற்காக திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு அமர்ந்திருந்த மணி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனாலும், சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மாரடைப்பில் அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார், இறந்த மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை பக்தர் மாரடைப்பால் சாவு அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,Tiruvannamalai temple ,Mani ,Kolathur Vetri Nagar ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...