சென்னை: இந்தி தெரியாததால் புதிய பெயர்களை உச்சரிக்க கடினமாக இருக்கும். அதனால், பழைய சட்ட பெயர்களையே பயன்படுத்துவேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஒரு குற்ற வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏராளமான வழக்கறிஞர்கள் இருந்தனர். அப்போது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 468 (குற்றவழக்குகளின் காலவரம்பு) தொடர்பாக விவாதம் நடந்துகொண்டிருந்தது. நீதிமன்றத்திற்கு சில வழக்கறிஞர்கள் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தனர்.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் நீதிபதியிடம், ஒன்றிய அரசு சமீபத்தில் மாற்றம் செய்த சட்ட பிரிவுகளின் பெயர்களை கருத்தில்கொள்ள வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதி, எனக்கு இந்தி தெரியாது. அதனால், என்னால் அந்த பெயர்களை உச்சரிக்க கடினமாக இருக்கும். தொடர்ந்து பழைய பெயர்களையே பன்படுத்த விரும்புகிறேன் என்றார். நீதிபதி இப்படி தெரிவித்ததும் நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மத்தியில் சிரிப்பு எழுந்தது. சமீபத்தில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகியவற்றை பாரதீய நியாய் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா என்று பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது. இந்த பெயர்கள் இந்த ஆண்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post சட்டத்தின் பெயர்கள் மாற்றப்பட்டாலும் எனக்கு இந்தி தெரியாததால் ஐபிசி என்றே பயன்படுத்துவேன்: சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து appeared first on Dinakaran.