×

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து 27ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை

சென்னை: மகாத்மா காந்தியின் பெருமைகளை சிறுமைப்படுத்த முயற்சி செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து 27ம்தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்ட பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தியாகி என்று போற்றுகிற பாரம்பரியத்தில் வந்த ஆர்.என்.ரவி போன்றவர்கள் இத்தகைய கருத்துகள் கூறுவதை எவரும் அனுமதிக்க முடியாது. ஆர்.என். ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் 27ம்தேதி காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜிவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். இதில், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலை வகிப்பார்கள். அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் தங்களது மாவட்டத்திற்குட்பட்ட ஏதாவது ஓரிடத்தில் ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து 27ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,CHENNAI ,KS Azhagiri ,Governor's ,House ,Mahatma Gandhi ,Tamil Nadu Congress ,President ,
× RELATED நெல்லை மாவட்ட காங்., தலைவர்...