×

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது!!

கொழும்பு : கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறைபிடித்தனர். மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.இதையடுத்து, இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று காலை சிறைப்பிடித்தது. ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி 2 படகுகளில் இருந்த 6 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.மீனவ பிரச்சனைக்கு இரு நாடு அரசுகளும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மீனவ பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

The post இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் : கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Kachativu ,Neduntivu ,Colombo ,Sri Lankan Navy ,Rameshwarat ,Tamil Nadu ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்