×

பாண்டி மெரினா கடற்கரை அருகே கடலில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் பலி

 

புதுச்சேரி, ஜன. 22: பாண்டி மெரினா கடற்கரை அருகே கடலில் குளித்த பள்ளி மாணவன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன், ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் ஜெகதீஷ்(16). மகாத்மா காந்தி வீதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை ஜெகதீஷ் தனது நண்பர்கள் 6 பேருடன் பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் பகுதிக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர்.

இதில் ஜெகதீஷ் மட்டும் கடலின் ஆழப்பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது, ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து நண்பர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து, முகத்துவாரம் தூர்வரும் பணியில் இருந்த ஊழியர்கள் ஓடி வந்து கடலில் இறங்கி ஜெகதீஷை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.

உடனே சுற்றுலா பயணி ஒருவர் ஜெகதீஷ்க்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனால், அவர் கடல் நீரை அதிகமாக குடித்து விட்டதாக தெரிகிறது.  இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாண்டி மெரினா கடற்கரை அருகே கடலில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Bandy Marina ,Puducherry ,Bandi Marina ,Murugan ,Puducherry Murungapakam ,Jegadeesh ,Mahatma Gandhi ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு