×

கோடை சீசனுக்காக தயாராகும் தொட்டபெட்டா தேயிலை பூங்கா

 

ஊட்டி,ஜன.20: கோடை சீசனுக்காக தொட்டபெட்டா தேயிலை பூங்காவும் தயாராகி வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் சுற்றுலா வருகின்றனர். இதனால் இவர்களை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும்.ஊட்டி தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் முன்னதாக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அவைகளில் ஏப்ரல் மாதம் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து காணப்படும்.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில் கோடை சீசனுக்காக தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் தோட்டக்கலைத் துறை சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதனை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காவிலும் நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.தற்போது ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவிலும் கோடை சீசனுக்காக மலர் நாற்றுக்கள் உற்பத்தி மற்றும் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கு உள்ள பாதைகளில் நடவு செய்வதற்காக மேரி கோல்ட் மற்றும் உட்லண்ட்ஸ் மலர் செடிகள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் இந்த மலர் செடிகள் அனைத்தும் பூங்காவில் உள்ள பாத்திகளில் நடவு செய்யப்படுவது என ஊழியர்கள் தெரிவித்தனர்.ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேயிலை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அழகிய மலர்கள் செடிகளில் பூக்கும் வண்ணமயமான மலர்களை கண்டு ரசிக்கலாம்.

The post கோடை சீசனுக்காக தயாராகும் தொட்டபெட்டா தேயிலை பூங்கா appeared first on Dinakaran.

Tags : Thottapeta ,Thottapetta Tea Park ,Nilgiri district ,Thottapeta Tea Park ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ