×

சிவகங்கையில் சாலைகளில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: உரிமையாளர்களுக்கு நகராட்சி எச்சரிக்கை

 

சிவகங்கை, ஜன. 20: சிவகங்கை நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம், பஸ் ஸ்டாண்ட், அரண்மனை வாசல், மதுரை சாலை, மேலூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக சாலைகளில் சுற்றித் திரிகின்றன. மேலும் சாலையின் நடுவில் நகராமல் நின்று கொள்கின்றன. அத்துடன் திடீரென சாலைகளில் ஓடி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை குலைந்து கீழே விழுகின்றனர். சில சமயங்களில் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

இது குறித்து நகராட்சிக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதையடுத்து சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் தொடர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் அதனை மாடு உரிமையாளர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. வழக்கம் போல சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில் நகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ‘’சாலையில் திரியும் மாடுகளை உரிமையாளர்கள் பிடித்து செல்ல வேண்டும்.

அவைகளை வீடுகளிலேயே தோட்டங்களிலோ கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். இதையும் மீறி சாலைகளிலோ, தெருக்களிலோ, பொது இடங்களிலோ பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் திரியவிடும் பட்சத்தில் நகராட்சி சார்பில் மாடுகளை பிடித்து அடைத்து வைக்கப்படும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, தொடர் நடவடிக்கையாக ஏலம் விடப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கையில் சாலைகளில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: உரிமையாளர்களுக்கு நகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Madurai road ,Melur road ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி