×

அமைச்சர் திடீர் ஆய்வில் போன் எடுக்காத டாக்டருக்கு நோட்டீஸ் மாவட்ட நிர்வாகம் அதிரடி காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்

காவேரிப்பாக்கம், ஜன.19: காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, போன் எடுக்காத டாக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி சந்தை மேட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இரும்மல், நாய்கடி, குரங்கு கடி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சிறிய அளவிலான விபத்துகளுக்கு, இந்த மருந்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக இந்த மருத்துவமனையை 30 படுக்கை கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் டாக்டர் இல்லை. ஒரு செவிலியர் மட்டும் இருந்ததால், பொறுப்பு மருத்துவர் இளங்கோவுக்கு அமைச்சர் போன் செய்துள்ளார். ஆனால் மருத்துவர் போன் எடுக்கவே இல்லை என தெரிகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை சுகாதார துணை இயக்குநர் மணிமாறனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தை நன்கு பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து அமைச்சர் போன் செய்தபோது எடுக்காத வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவிடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இச்சம்பவத்தால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post அமைச்சர் திடீர் ஆய்வில் போன் எடுக்காத டாக்டருக்கு நோட்டீஸ் மாவட்ட நிர்வாகம் அதிரடி காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் appeared first on Dinakaran.

Tags : Kaveripakkam ,Minister ,Subramanian ,Kaveripakkam Primary Health Centre ,Government Primary Health Center ,Ranipet District ,Kaveripakkam Municipal Market Metu ,Kaveripakkam Primary Health Center ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...