×

விவசாய தேவைக்காக 1461 டன் யூரியா ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது * தேவையான உரம் கையிருப்பில் உள்ளது * வேளாண் இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு

திருவண்ணாமலை, ஜன.19: திருவண்ணாமலை மாவட்ட விவசாய தேவைக்காக 1461 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு, உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது பின் சம்பா பருவ சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பாசன கிணறுகள், ஏரிகள், அணைகளில் நீர் இருப்பு உள்ளதால், பின் சம்பா பருவ நெல் சாகுபடி மாவட்டம் முழுவதும் பரவலாக நடக்கிறது. அதையொட்டி, விவசாய தேவைக்கான 1461 மெட்ரிக் டன் எம்எப்எல் யூரியா மணலியில் இருந்து ரயில் மூலம் நேற்று திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், லாரிகள் மூலம் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், யூரியா 11,127 மெட்ரிக் டன், டிஏபி 1154 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1474 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 404 மெட்ரிக் டன், மற்றும் காம்ப்ளக்ஸ் 7072 மெட்ரிக் டன் உரங்கள் தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் உரவிற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி, பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், அரசு நிர்ணயித்த விலைக்கு அதிமாக விற்பனை செய்யக்கூடாது. அதோடு, விற்பனை முனையக்கருவி பயன்படுத்தி மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் மற்றும் உரங்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், யூரியா போன்ற உரங்களை விவசாயம் அல்லாத பிற தொழில்களுக்கு பயன்படுத்துதல் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் கீழ் சட்டப்படி குற்றமாகும். எனவே, இது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

The post விவசாய தேவைக்காக 1461 டன் யூரியா ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது * தேவையான உரம் கையிருப்பில் உள்ளது * வேளாண் இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai District ,Thiruvannamalai ,Thiruvannamalai district ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...