×

சேலம் பெரியார் பல்கலை.யில் சிறப்பு தணிக்கை குழு சோதனை: பண பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் ஆய்வு

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சிறப்பு தணிக்கை குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ் உள்ளிட்ட 4 பேர் மீது, அரசு விதிகளை மீறி தனியார் கல்வி நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரில், கருப்பூர் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த புகாரில் துணை வேந்தர் ஜெகநாதன், கடந்த மாதம் 26ம் தேதி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, சேலம் மாநகர போலீசார், பெரியார் பல்கலைக்கழகத்தில் புகாருக்குள்ளான துணை வேந்தர், பதிவாளர், அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் 2 கட்டங்களாக சோதனை நடத்தினர். தமிழ்த்துறை தலைவர் அலுவலகத்தில் சோதனை செய்து, துறை தலைவர் பெரியசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பூட்டர் பவுண்டேஷன் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர் வனிதாவிடம், தனிப்பட்ட முறையில் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். முறைகேடு புகார் தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்.

இதனிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து புகாருக்குள்ளான துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்தது துறை தலைவர்களுடன் ஆதரவு திரட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை, தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தலைமை கூடுதல் தணிக்கை இயக்குனர் ஜெய்சங்கர் ஆலோசனையின் பேரில், உள்ளாட்சி தணிக்கை அலுவலர் ஸ்ரீதர் மற்றும் தணிக்கை குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தணிக்கை அதிகாரிகள், பூட்டர் பவுண்டேசன் பண பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். நிதி அலுவலகம், திட்டம் மற்றும் வளர்ச்சி அலுவலகம், துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றின் செலவின ஆவணங்கள் ஆகியவற்றையும் அவர்கள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘உள்ளாட்சி நிதி பெறும் கல்வி நிறுவனம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும், அவ்வப்போது உள்ளாட்சி நிதி தணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 6 பேர் கொண்ட குழுவினர், பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலகம் மற்றும் சிண்டிகேட் கூட்ட அரங்கில் ஆவணங்களை ஆய்வு செய்தோம். உள்ளாட்சி நிதியின் வரவு-செலவு ஆவணங்களை தணிக்கை செய்யப்பட்டது,’ என்றனர்.

The post சேலம் பெரியார் பல்கலை.யில் சிறப்பு தணிக்கை குழு சோதனை: பண பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Omalur ,Vice ,Jaganathan ,Thangavel ,Associate ,Sathish ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...