×

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தின வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி, குறள் வழியே நம் நெறி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* ஆளுநர் வாழ்த்து செய்தியில் வள்ளுவர் படத்துக்கு காவி ஆடை
திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் வலைதளத்தில் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். மேலும், அதில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படம் காவி ஆடை அணிந்ததுபோல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தின வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Valluvar ,Chief Minister ,M. K. Stalin ,Tiruvalluvar Day ,Chennai ,M.K.Stalin ,Vanpugazh Valluvar ,Amishtamil ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...