×

சென்னை விமான நிலையத்தில் மூடுபனி; 88 விமான சேவை பாதிப்பு: 12 விமானங்கள் தரையிறங்க முடியாததால் பயணிகள் தவிப்பு


மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மூடுபனியால் 88 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. 12 விமானங்கள் தரையிறங்க முடியாததால் பயணிகள் தவித்தனர். 68 விமானங்களின் வருகை, புறப்பாடு பல மணி நேரம் தாமதமானது. 8 விமானங்களின் டெல்லி, மும்பை, இலங்கை வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையான நேற்று திங்கட்கிழமை காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சென்னை விமான நிலைய பகுதியில் திடீரென மூடுபனி ஏற்பட்டது. விமான நிலையம் தெரியாத அளவில் பனி சூழப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த நேரத்தில் சென்னையில் தரையிறங்க வந்த விமானங்கள் அனைத்தையும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பும் பணிகளில் ஈடுபட்டனர்.

அதன்படி லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, குவைத், மஸ்கட், டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே, செங்காடு ஆகிய 12 விமானங்கள் ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதுபோல் சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செகந்திரபாத், கோழிக்கோடு உள்ளிட்ட 28 வருகை விமானங்கள், துபாய், குவைத், மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, லண்டன், அந்தமான், டெல்லி, கொல்கத்தா, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 40 புறப்பாடு விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. பனிமூட்டம் காரணமாக டெல்லி, மும்பை, இலங்கை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.

காலை 9 மணிக்கு மேல் படிப்படியாக மூடுபனி விலகியது. இதையடுத்து 2 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின. திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 88 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர். நேற்று முன்தினம் ஞாயிறன்று போகி பண்டிகை புகை, பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிப்பட்ட நிலையில், மறுநாள் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட மூடுபனியால் மீண்டும் விமான சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகியது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சென்னை விமான நிலையத்தில் மூடுபனி; 88 விமான சேவை பாதிப்பு: 12 விமானங்கள் தரையிறங்க முடியாததால் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Fog ,Airport ,Meenambakkam ,Chennai airport ,Delhi, ,Mumbai ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்