×

மூணாறில் தீ விபத்தில் 7 வீடுகள் நாசம்

மூணாறு,ஜன. 13: கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு சொந்தமான கடலார் எஸ்டேட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு எட்டு முறி லயன்ஸில் ஏழு வீடுகளில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட உள்ள தொழிலாளர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் தொழிலாளர்கள் வசிக்கும் எட்டு முறி லயன்ஸில் திடீரென தீ பற்றி எரிந்தது.

இதை அறிந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டுக் கொண்டு ஓடினர். இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த நேரத்தில் லயன்ஸில் தங்கி இருந்த குழந்தைகள்,பெண்கள் மற்றும் முதியவர்கள் அங்கிருந்து ஓடி தப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் குறித்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் 7 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆனது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள், குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள், உடைகள் அனைத்தும் முற்றிலும் நாசமானது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

The post மூணாறில் தீ விபத்தில் 7 வீடுகள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Munnar Munnar ,Cuddalar Estate ,Kannan Devan Company ,Munnar, Kerala ,Lions ,Munnar ,Dinakaran ,
× RELATED மூணாறில் சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்