×

இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை தாசில்தார் முன்னிலையில் நடந்தது சாவில் சந்தேகம் என தந்தை புகார்

சேத்துப்பட்டு, ஜன.13: சேத்துப்பட்டு அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் என புகார் எழுந்த நிலையில், சடலத்தை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கங்கைசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் முனீர்பாஷா. இவரது மனைவி சமிமாபீ(28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக சமிமாபீ கடந்த 6ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள இடுகாட்டில் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், சமிமாபீயின் சாவில் சந்தேகம் உள்ளது என அவரது தந்தை சாதிக்பாஷா சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தாசில்தார் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சமிமாபீயின் சடலத்தை மறுபிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை சேத்துப்பட்டு பழம்பேட்டை இடுகாட்டில் தாசில்தார் வெங்கடேசன் முன்னிலையில் சமிமாபீ உடலை தோண்டி எடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், சடலம் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை தாசில்தார் முன்னிலையில் நடந்தது சாவில் சந்தேகம் என தந்தை புகார் appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Sethupattu ,Muneer Pasha ,Gangaisudamani ,Sethu ,Tiruvannamalai district ,
× RELATED சேத்துப்பட்டு மாதாமலையில் வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம்