×

டாக்டருக்கு பாலியல் தொல்லை பாஜ பிரமுகர் அதிரடி கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார் (50). பாஜ பிரமுகர். இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட பலரிடம் வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி செய்ததால் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் மீது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார். இந்நிலையில் நாஞ்சில் ஜெயக்குமார் சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்த பெண் டாக்டரிடம், தன்னை அரசியல் பிரமுகர் என அறிமுகப்படுத்தி பேசினார்.

சம்பவத்தன்று வழக்கம் போல் சிகிச்சைக்கு சென்றபோது, மிகவும் ஆபாசமான முறையில் நாஞ்சில் ஜெயக்குமார் அமர்ந்திருந்தாராம். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், அவரை கண்டித்துள்ளார். அப்போது அவரை ஆபாசமாக பேசி மிரட்டி சென்ற நாஞ்சில் ஜெயக்குமார், பின்னர் போனில் பெண் டாக்டரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதுடன், பெண் டாக்டரின் புகைப்படத்தை மார்பிங் செய்து தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், ஆசைக்கு இணங்க மறுத்தால் இணைய தளத்தில் வெளியிடுவேன் என்று கூறியும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நாஞ்சில் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

The post டாக்டருக்கு பாலியல் தொல்லை பாஜ பிரமுகர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Nagercoil ,Nanjil Jayakumar ,Tallikkadu ,Thakala ,Kumari district ,Parvathipuram ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...