ஊட்டி,ஜன.12: ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய பெய்த மழை காரணமாக பூண்டு பயிர்கள் பல இடங்களில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட்,பீட்ரூட்,உருளைக்கிழங்கு,பூண்டு போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளான முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா,மேல் கவ்வட்டி தேனாடுகம்பை போன்ற பகுதிகளில் அதிக அளவு பூண்டு பயிரிடப்படுகிறது.
பல ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிர் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில்,நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சில பகுதிகளில் காற்று வீசியது.இதனால், மேல்கவ்வட்டி மற்றும் சில பகுதிகளில் பூண்டு பயிர் அனைத்தும் அடியோடு சாய்ந்தது.
அறுவடைக்குத் தயாராக இருந்த பூண்டு பயிர் காற்றால் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைதுள்ளனர்.பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள் கூறுகையில்: சாதாரணமாக மற்ற பயிர்களை காட்டிலும், பூண்டு பயிரிட முதலீட்டுச் செலவு அதிகம். இந்நிலையில், அறுவடைக்கு பூண்டு தயாராகி இருந்தது.ஆனால், காற்று மற்றும் மழையால் செடிகள் சாய்ந்து விட்டன. இதனால் மகசூல் பாதிக்கும், என்றனர்.
The post ஊட்டி புறநகர் பகுதிகளில் சூறாவளிக் காற்றுக்கு பூண்டு பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.