×

மேட்டுப்பாளையம் – கோவை ரயில் தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்ற கோரி மனு

 

மேட்டுப்பாளையம், ஜன.9: பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வந்த ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனை நேற்று அனைத்து வணிகர்கள் சங்க அமைப்பாளர் ஹபிபுல்லா, உருளைக்கிழங்கு வர்த்தக சபை தலைவர் ரங்கசாமி, ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட 16 சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து நேரில் சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி பயணிகள் ரயிலும், சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் – கோவை ரயில் தடம் ஒரு வழிப்பாதையாக உள்ள நிலையில் அதனை இருவழித்தடமாக மாற்ற வேண்டும். மேட்டுப்பாளையம் – கோவை இடையே தினமும் 5 முறை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதனை ஐந்து முறையாக இயக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை குறைக்கும் வகையில் கூடுதலாக மெமு ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையம் நகரில் அண்மைக்காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வரும் ஒன்றிய பட்ஜெட்டில் மக்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.

The post மேட்டுப்பாளையம் – கோவை ரயில் தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்ற கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Methuppalayam ,Goa ,METUPALAYAM ,EU ,MINISTER OF ,UNION, L.A. ,PONVIZHA CITY ,METUPPALAYAM ,Murugan ,All Merchants Association ,Habibullah ,President ,Potato Trade Council Rangasamy ,Dinakaran ,
× RELATED விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர்...