* மலேசியா ஓபன் இன்று ஆரம்பம்
இந்த ஆண்டின் முதல் பேட்மின்டன் தொடராக மலேசியா ஓபன் இன்று கோலாலம்பூரில் தொடங்குகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திரங்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், எச்.எஸ்.பிரணாய் ஆகியோரும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆகர்ஷி காஷ்யப் பங்கேற்கின்றனர். முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து மற்றும் இரட்டையர் பிரிவில் சாத்விக் – சிராக் இணை விளையாடவில்லை.
* ஸ்வெரவ் முன்னேற்றம்
புத்தாண்டின் புதிய டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. யுனைட்டட் கோப்பை, பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ், ஆக்லாந்து டென்னிஸ் போட்டிகளுக்கு பிறகு இப்பட்டியல் வெளியாகி உள்ளது. ஏடிபி தரவரிசையில் யுனைட்டட் கோப்பை சாம்பியன் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே 6வது இடத்தில் இருந்த கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றபடி டாப்-10ல் எந்த மாற்றமும் இல்லை. டபுள்யூடிஏ தரவரிசையில் பிரிஸ்பேன் சாம்பியன் எலனா ரைபாகினா (கஜகஸ்தான்) ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தை எட்டியுள்ளார். கோரி காஃப் (அமெரிக்கா) 3வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
* டெல்லியை வீழ்த்தியது புதுச்சேரி
ரஞ்சி கோப்பை தொடரின் டி பிரிவில் டெல்லி – புதுச்சேரி அணிகள் மோதின. டெல்லி முதல் இன்னிங்சில் 148, 2வது இன்னிங்சில் 145 ரன்களில் ஆட்டமிழந்தது. புதுச்சேரிக்காக விளையாடும் மத்தியபிரதேச வீரர் கவுரவ் யாதவ் முதல் இன்னிங்சில் 7 விக்கெட், 2வது இன்னிங்சில் கேரள வீரர் அபின் மாத்யூ 5 விக்கெட் அள்ளினர். முதல் இன்னிங்சில் 244 ரன் எடுத்திருந்த புதுச்சேரி 2வது இன்னிங்சில் 49 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. கடைசி நாளான நேற்று அந்த அணி 13.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.