×

மகளை ஆசைக்கு இணங்க துன்புறுத்தியதால் ஆத்திரம்; திருநங்கையாக மாறிய கணவன் கூலிப்படை ஏவி கொலை: ஆசிரியை உள்பட 3 பேர் கைது

திருமலை: மகளை ஆசைக்கு இணங்க துன்புறுத்தியதால் திருநங்கையாக மாறிய கணவன் கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவரது மனைவியான ஆசிரியை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம் பொய்கல்லியை சேர்ந்தவர் வேதஸ்ரீ (34), தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், நசர்புரா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்(33) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2015ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை வெங்கடேஷ் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் வெங்கடேஷின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் திடீரென தனது காதுகளை குத்தி கம்மல் போட்டுக்கொண்டும், மூக்கு குத்தி கொண்டும், பெண்களின் ஆடைகளை அணிந்தும் நடமாடினார். 2019ல் திருநங்கையாக மாறி தனது பெயரை ரோஜா என்றும் வைத்துக்கொண்டார். இதனால் வேதஸ்ரீ கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். திருநங்கையாக மாறிய வெங்கடேஷ் மகளை தனது ஆசைக்கு இணங்க செய்யும்படி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். வேதஸ்ரீ வேலை பார்க்கும் தனியார் பள்ளிக்கும் அடிக்கடி சென்று தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் வேதஸ்ரீயை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். வேறு பள்ளியில் சேர்ந்தபோதும் இதே நிலை தொடர்ந்தது.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த போயினி ரமேஷ் (39) என்பவருடன், வேதஸ்ரீக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த வெங்கடேஷ், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த வேதயும் ரமேசும் சேர்ந்து, வெங்கடேஷை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி அந்த ஊரில் உள்ள செருப்பு வியாபாரியான மற்றொரு ரமேஷ் என்பவரிடம் கூறி ₹18 லட்சம் பேசி கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி 2 தவணைகளில் ₹4.60 லட்சத்தை வேதஸ்ரீ கொடுத்துள்ளார்.

இதனையடுத்து செருப்பு வியாபாரி ரமேஷ், தனது நண்பரான ரவுடி இப்பலா சேகரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு இப்பலா சேகர், வெங்கடேஷூடன் அறிமுகமாகி நண்பர் போல் பழகினார். கடந்த டிசம்பர் 11ம்தேதி, சித்திப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்த இப்பலா சேகர், அன்றிரவு வெங்கடேசுடன் சேர்ந்து மது அருந்தினார்.

அதிகளவு மது ஊற்றிக்கொடுத்த நிலையில் வெங்கடேஷ் போதையில் சரிந்து விழுந்தார். அப்போது இப்பலா சேகர், தனது கூட்டாளிகள் 2 பேர் உதவியுடன் தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சித்திப்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் வெங்கடேசை அவரது மனைவி வேதஸ்ரீ கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து வேதஸ்ரீ, போயினி ரமேஷ், இப்பலா சேகர் ஆகிய 3பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

The post மகளை ஆசைக்கு இணங்க துன்புறுத்தியதால் ஆத்திரம்; திருநங்கையாக மாறிய கணவன் கூலிப்படை ஏவி கொலை: ஆசிரியை உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Vedhasree ,Poikalli, Sithipet district, Telangana ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்