×

மெட்ரோ ரயில் பணி காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது: அறிவிப்பு பலகைகள் முறையாக இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக ஆர்.கே.சாலை, மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி பகுதிகளில் உள்ள சாலைகளில் நேற்று முதல் பணிகள் முடியும் வரை அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் போக்குவரத்து மாற்றம் குறித்து முறையாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடந்து வருவதால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சாலையின் இடையே உள்ள மேம்பாலம் மற்றும் கால்வாய் இடையே செல்லும் ேமம்பாலத்தின் தூண்டுகள் மெட்ரோ ரயில் சுங்கம் பாதையில் அமைந்துள்ளது.

இதனால் சுரங்கம் தோண்டும் போது மேம்பாலத்தின் தூண்கள் இடையே வருவதால் ராயப்பேட்டை பகுதியில் உள்ள அஜந்தா சந்திப்பில் உள்ள மேம்பாலம், மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள திருமயிலை பகுதியில் உள்ள கால்வாயின் இடையே உள்ள மேம்பாலம் இடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு ெசய்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துவருகிறது. அதைதொடர்ந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் பணிகள் செய்ய இடையூராக உள்ள மேம்பாலங்களை இடிக்க சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சென்னை மாநகர போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். அதைதொடர்ந்து ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் சாலையின் இடையை உள்ள மேம்பால பகுதிகளில் நேற்று முதல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறிப்பாக, ராயப்பேட்டை நெடுஞ்சாலை (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை):
* ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி ராமன் சாலை – வலது – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு – வலது – ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

* ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி வரும் வாகனங்கள் – ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை- இடது நீலகிரிஸ் கடை – மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை – வலது – டிடிகே சாலை – கௌடியா மட சாலை வரை செல்லும்.

* வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாக செயல்படும்.

* அஜந்தா சந்திப்பில் இருந்து அதிமுக அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பகுதி 2: ஆர்.கே.மட் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை)
* ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் – வலது லஸ் சர்ச் சாலை- டி சில்வா சாலை – பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை- செயின்ட் மேரி சாலை – இடதுபுறம் திரும்பி – சி.பி ராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* ஆர்.கே.மட சாலையில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) -இடதுபுறம் – ரங்கா சாலை – வலது – கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ – லஸ் சர்ச் சாலை வழியாக – பி.எஸ்.சிவசாமி சாலை – வலது – சுலிவன் கார்டன் தெரு – இடது – ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.

* கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர் ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ 1வது தெரு, லஸ் அவென்யூ, முண்டககன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.

* சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மட் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.

* மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மட் சாலை வழியாக புறப்படும் மாநகர மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை – இடதுபுறம் திரும்பி – தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்லலாம்.

பகுதி 3: ஆர்கே மட சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை):
* வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்- வலதுபுறம் திரும்பி – செயின்ட் மேரிஸ் சாலை – இடதுபுறம் திரும்பி – சிபி ராமசாமி சாலை – காளியப்பா சந்திப்பு – நேராக ஆர் ஏ புரம் 3 வது குறுக்குத் தெரு சென்று – காமராஜர் சாலை – சீனிவாசா அவென்யூ – கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர் கே மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மட சாலை – இடது – திருவேங்கடம் தெரு – திருவேங்கடம் தெரு விரிவாக்கம் – வி.கே. ஐயர் சாலை – தேவநாதன் தெரு – வலது – செயின்ட் மேரிஸ் சாலை – இடது – ஆர். கே மட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* மந்தைவெளி செல்லும் மாநகர பேருந்துகள் – வாரன் சாலை இடதுபுறம் – செயின்ட் மேரிஸ் சாலை – வலதுபுறம் திரும்பி – சிறுங்கேரி மட சாலை மற்றும் வி.கே. ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.

* சீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன், பள்ளி சாலை, ஆகியவை ஒருவழிப்பாதையாக செயல்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தாலும், இன்று திங்கள் கிழமை என்பதால் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து மாற்றம் குறித்து தெரியாமல் வழக்கமாக வருவது போல் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளுக்கு வந்தனர். அப்போது சாலையின் இடையே போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து மாற்று வழியில் செல்லுமாறு கூறியதால் வாகன ஓட்டிகள் சற்று குழப்பம் அடைந்தனர்.

வழக்கமாக நீண்ட நாட்களுக்கு மேல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் இடங்களில் ஒரு வாரத்திற்கு முன்பில் இருந்தே போலீசார் போக்குவரத்து மாற்றம் குறித்து வரைப்படம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிப்பு பலகைகள் வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அறிவிப்பு பலகைகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதற்கு முன்நாள் நள்ளிரவு தான் வைத்தனர். அதவும் போக்குவரத்து மாற்றம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தொலைவில் எங்கும் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்த அறிவிப்பு பலகைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். மேலும், வாரத்தின் முதல் நாளான இன்று அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது: அறிவிப்பு பலகைகள் முறையாக இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Raippettai, Mayilapur ,Metro Rail ,Chennai ,Mayilapur ,Raippettai ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...