×

தாம்பரம் மாநகராட்சியில் 2 இடங்களில் ரூ.4 கோடியில் நூலகம், அறிவுசார் மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்துக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலதன மானிய நிதி 2021-22ன் கீழ், ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலும், தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலத்துக்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெல்லையப்பர் தெரு பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் கட்டப்பட்டன. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

சேலையூர் பகுதியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் எஸ்.இந்திரன், டி.காமராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் ஷகிலா ஜான்சி மேரி, ஜோதி குமார், சசிகலா கார்த்திக், சிட்லபாக்கம் சுரேஷ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அதேபோல, குரோம்பேட்டை பகுதியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டல குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, ஜெயபிரதீப் சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டனர். நிகழ்வின்போது, உடன் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் 2 இடங்களில் ரூ.4 கோடியில் நூலகம், அறிவுசார் மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,CM ,M.K.Stalin ,Tambaram ,Selaiyur ,5th Zone ,Nellaiappar Street ,Krompettai ,Tambaram Municipal Corporation ,Kodi ,Chief Minister ,Dinakaran ,
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!