சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர்கள் 3 பேரும் ஆந்திரா, தமிழகத்துக்கு வர உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து முடித்து உள்ளது. இந்தநிலையில் மாநிலங்களில் உள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், தேதியை இறுதி செய்யவும், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய ஆணையர்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஜனவரி 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆய்வு செய்ய உள்ளனர்.
முன்னதாக, துணைத் தேர்தல் ஆணையர்கள் நாளை இரு மாநிலங்களிலும் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து ஆணையத்திற்கு விளக்குவார்கள். துணைத் தேர்தல் ஆணையர்கள் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளனர். அவர்கள் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆணையத்திடம் முழுமையாக விளக்கி கூற உள்ளனர். அதன்பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் 3 பேரும் ஒவ்வொரு மாநிலமாக செல்ல உள்ளனர். அதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர். 2019ம் ஆண்டில், மக்களவைத் தேர்தல்கள் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றன. வாக்குகள் மே 23 அன்று எண்ணப்பட்டன.
The post நாடாளுமன்ற தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை appeared first on Dinakaran.