×

பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் விரைவில் அறிவிப்பு: திருச்சூரில் பிரதமர் மோடி பேச்சு

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். லட்சத்தீவில் இருந்து விமானம் மூலம் கொச்சி வந்த அவர், பின்னர் ஹெலிகாப்டரில் திருச்சூர் சென்றார். திருச்சூர் நகரில் சுமார் ஒன்றரை கிமீ தூரம் ரோடு ஷோ நடத்திய அவருக்கு சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நடந்த ‘பெண் சக்தி மோடியுடன்’ என்ற பாஜ மகளிர் அணி மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது மோடி பேசியதாவது: நான் ஒரு சிவ பக்தன். இங்குள்ள வடக்குநாதர் கோயிலிலும் சிவனின் அருள் உள்ளது. சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ், இடது முன்னணி ஆதரவு அரசுகள் பெண்களின் வலிமையை ஒரு குறையாக கண்டனர். பெண் சக்தியை அவர்கள் புறக்கணித்தனர். ஆனால் மோடி அரசு பெண்களுக்கு அதிகாரம், உரிமையை உறுதி செய்தது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. முத்தலாக்கில் இருந்து முஸ்லிம் சமுதாய பெண்களுக்கு விடுதலை கொடுப்போம் என உறுதியளித்தேன். அதுவும் நடந்துள்ளது.

பாஜவுக்கு ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் என நான்கு பிரிவினர் உள்ளனர். அதனால்தான் அரசின் அனைத்து திட்டங்களின் பலன்களும் இவர்களுக்கு கிடைத்து வருகின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகளில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. கடந்த 10 வருடத்தில் பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களுக்காக மேலும் ஏராளமான திட்டங்கள் விரைவில் கொண்டுவரப்பட உள்ளன. கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு நாடுகளில் உள்ளனர். உக்ரைன் போர், சூடான், காசா ஆகிய நாடுகளில் பிரச்னைகள் ஏற்பட்டபோது அங்கிருந்து மலையாளிகளை மிகவும் பாதுகாப்பாக நாட்டுக்கு கொண்டு வந்தோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்த மோடி

திருச்சூரில் பாஜக மகளிர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது தமிழக சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்தார். அவர் பேசும்போது, இன்று தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பிறந்த நாளாகும் என்று குறிப்பிட்டார்.

The post பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் விரைவில் அறிவிப்பு: திருச்சூரில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Thrissur Thiruvananthapuram ,Modi ,Kerala ,Kochi ,Lakshadweep ,Thrissur ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...