×

பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த கால்நடைகள் * ₹1 கோடியை தாண்டிய வர்த்தகம் * விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி பொங்கல் திருநாளை முன்னிட்டு

வேலூர், ஜன.3: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் பொங்கலுக்கு முன்னதாக நடைபெறும் சந்தை என்பதால் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் கால்நடைகள் குவிந்தன. அதற்கேற்ப வர்த்தகமும் ₹1 கோடியை தாண்டியதால் வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக டல்லடித்த பொய்கை மாட்டுச்சந்தையின் நிலவரம் கடந்த 3 வாரங்களாக சுமாரான நிலையை எட்டிய நிலையில், பொங்கலுக்கு முந்தைய சந்தை என்பதால் வழக்கத்தை விட நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 500க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்து பொய்கை மாட்டுச்சந்தை களைக்கட்டியது. கால்நடைகள் விற்பனை தவிர பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கால்நடைகளுக்கான கயிறுகள், கழுத்து மணிகள், சங்குகள் கோர்த்த கயிறு, சிறிய அளவிலான பெயின்ட் டின்கள், அலங்கார பிளாஸ்டிக் வண்ண பூக்கள் என கால்நடைகளை அலங்கரிக்கும் பொருட்களின் வியாபாரமும் களைக்கட்டியது.

இதன் காரணமாக நேற்று ஒட்டுமொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை ஏறத்தாழ ₹1 கோடியை தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று 1500க்கும் மேற்பட்ட மாடுகள், 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் சந்தையில் குவிந்தன. வர்த்தகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த வாரத்தை போலவே இந்த வாரத்தை விட இந்த வாரம் வியாபாரம் படுஜோர்தான். கறவை மாடுகளுடன், காளைகளும் அதிகளவில் விற்பனை நடந்துள்ளது. இதற்கு தீவனம் தாராளமாக கிடைப்பதும், பொங்கல் பண்டிகையும் காரணமாகும்’ என்றனர்.

The post பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த கால்நடைகள் * ₹1 கோடியை தாண்டிய வர்த்தகம் * விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி பொங்கல் திருநாளை முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags : Poigai Cattle Market ,Pongal ,Vellore ,Tamil Nadu ,
× RELATED பொய்கை மாட்டுச்சந்தையில் வரத்து...