×

புதுச்சேரியில் பரிதாபம் மரத்தில் தூக்குபோட்டு ஏஎஸ்ஐ தற்கொலை

புதுச்சேரி, ஜன. 3: மரத்தில் தூக்குபோட்டு ஏஎஸ்ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அடுத்த மூலகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரவத்திரன்(57). காவலரான இவர் கோரிமேட்டில் உள்ள மியூசிக் பேண்ட் யூனிட்டில் சிறப்பு துணை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதற்கிடையே நேற்று அதிகாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து வாக்கிங் செல்வதற்காக சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அவர் புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானம் வந்தபின் தனது சைக்கிளை வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு, தான் பணிபுரியும் மியூசிக் பேண்ட் யூனிட் பின்புறமுள்ள சப்போட்டா மரத்தில் அவர் எடுத்துவந்திருந்த துண்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிக்கு வந்த காவலர்கள், அலுவலகத்தின் பின்புறமுள்ள மரத்தில் ஏஎஸ்ஐ வீரவத்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வடக்கு பகுதி எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின்பேரில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய ஏஎஸ்ஐயின் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோரிமேடு போலீசார் நடத்திய விசாரணையில், சமீபகாலமாக அவர் தீராத வயிற்றுவலி மற்றும் உடல்வலியால் அவதிப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து வீரவத்திரன் தற்கொலை செய்வதற்குமுன், எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எனக்கு தீராத வயிற்றுவலி, உடல் வலி இருந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். நானேதான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள், என்று எழுதியிருந்தார். அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுச்சேரியில் பரிதாபம் மரத்தில் தூக்குபோட்டு ஏஎஸ்ஐ தற்கொலை appeared first on Dinakaran.

Tags : ASI ,Puducherry ,Veeravathiran ,Moolakulam ,Redyarpalayam, Puducherry ,Korimet ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...