- புத்தாண்டு தினம்
- புதுச்சேரி
- ஆதித்யன்
- விக்னேஷ்வர்
- பள்ளித் தெரு, நோணாங்குப்பம், புதுச்சேரி
- புதுவை கடற்கரை சாலை
- ராஜேஷ்
- புதிய ஆண்டு
- வெங்கடசுப்பா
புதுச்சேரி, ஜன. 3: புதுச்சேரி நோணாங்குப்பம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் ஆதித்தியன் மகன் விக்னேஷ்வர்(24). ஏசி மெக்கானிக்கான இவர் 31ம் தேதி தனது நண்பர் ராஜேஷ் என்பவருடன் புதுவை கடற்கரை சாலைக்கு சென்று புத்தாண்டு கொண்டாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அந்தோணியார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அரியாங்குப்பம் காக்காயன்தோப்பைச் சேர்ந்த நிர்மல் (எ) நிர்மல்குமார் (23), விக்கி (எ) விக்னேஷ்வரன் (22) மற்றும் அவர்களது நண்பர்கள் விக்னேஷ், பிரதீப், விஷ்வா (எ) மரியவிஷ்வா உள்ளிட்டோர் இரண்டு பைக்கில் வந்துள்ளனர். அச்சமயம், விக்னேஷ்வர் மற்றும் ராஜேஷூடன் நின்றிருந்த பெண்ணை நிர்மல்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து விக்னேஷ்வர் தட்டி கேட்கவே இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது விக்னேஷ்வரின் கழுத்தில் நிர்மல்குமார் ஓங்கி குத்தியதில் அவர் பேச்சு மூச்சின்றி சுருண்டு விழுந்தார். உடனே நிர்மல்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அங்கு மயங்கி கிடந்த விக்னேஷ்வரை அவரது நண்பர் ராஜேஷ் மீட்டு ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ேதாழியை கிண்டல் செய்ததை புத்தாண்டு தினத்தில் தட்டிக் கேட்ட தகராறில் கொலை நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் கில்டா சத்யநாராயணா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நிர்மல்குமார் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து விக்கி என்ற விக்னேஸ்வரனும் சரணடைந்தார். இருவரிடமும் தனித்தனியாக தனிப்படை விசாரணை நடத்தினர். தோழியை கேலி செய்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் கழுத்தில் ஓங்கி குத்தியது, கொலையில் முடிந்துவிட்டதாக சரணடைந்த 2 பேரும் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post புத்தாண்டு தினத்தில் நடந்த ஏசி மெக்கானிக் கொலையில் 2 வாலிபர்கள் போலீசில் சரண் appeared first on Dinakaran.