×

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எத்தனால் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: டிரைவர் பலி; போக்குவரத்து பாதிப்பு

சூளகிரி: சூளகிரி அருகே எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து, நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எத்தனால் ஏற்றி கொண்டு, ஒரு டேங்கர் லாரி நேற்று சென்றது. ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அருகே மேலுமலை கணவாயில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது.

சிறிது நேரத்தில் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் டேங்கரில் இருந்த எத்தனால் தீப்பிடித்து, லாரி மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அவ்வழியே சென்றவர்கள், இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக குருபரப்பள்ளி போலீசாருக்கும், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பர்கூர், ஓசூரை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால், சாலையின் இருபுறங்களிலும் 500 மீட்டர் தூரத்திற்கு முன்பே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், சுமார் 10 கி.மீ தூரத்திற்கு மேல் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். முன்னதாக, பலத்த தீக்காயத்துடன் லாரியில் இருந்து வெளியே குதித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் ராமலிங்கத்தை (45), குருபரப்பள்ளி போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் எத்தனால் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: டிரைவர் பலி; போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ethanol ,National Highway ,Sulagiri ,Nadurot ,KARNATAKA STATE BANGALORE ,KERALA STATE KOCHI ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!