×

மனதுக்கு இதம் தரும் மார்கழி தரிசனம்..

இறைவனுக்கும் இறைவழிபாட்டிற்கும் உகந்த மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. “மாதங்களில் நான் மார்கழி”… என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்வது சிறப்பு. இதனால் தீராத நோய்களும், பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

மகத்துவம் நிறைந்த மாதம்

மார்கழி மாதம் எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். அதனால்தான் அதனை பீடுடைய அதாவது செல்வம் மிகுந்த மாதம் என்று அழைக்கின்றனர். மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்தது. எனவே நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், இம்மாதத்தில் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும். ஒரு ஆண்டில் 11 மாதங்கள் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

திருப்பாவை திருவெம்பாவை

தமிழகத்தில் மார்கழி மாதம் வந்துவிட்டாலே அதிகாலை வேளையில் வைணவக் கோயில்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளும், பக்தி இசையும் மணக்கத் தொடங்கிவிடும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

வழிபாட்டிற்கு உகந்தது

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் உத்தராயணம் பகல் என்றும், தட்சணாயனம் இரவென்றும் கூறுவார்கள். இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் மார்கழிமாதம் தேவர்களுக்கு வைகறைப் பொழுது. இது தனுர்மாதம் என்றழைக்கப்படுகிறது. விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது.

செல்வம் தரும் நோன்பு

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். மார்கழி மாத நோன்பு, மிகவும் சிறந்தது. மார்கழி மாத வழிபாடு வழி வழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.

மகாலட்சுமி வாசம் செய்வாள்

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீரலுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று சருமத்திற்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும். கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும்.

மார்கழி மாதம் முழுதும் அதிகாலை எழுந்து கோவிலுக்கு செல்ல விரும்புகிறவர்கள் தனிமையாக செல்வதைவிட ஒரு சிறு குழுவாக அல்லது நண்பர்கள் வட்டமாக செல்லலாம் இன்னும் சௌகரியமாக சுறுசுறுப்பாக இருக்கும். எனவே குளிர்கிறதே என்று இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்காமல் அதிகாலை எழுந்து நீராடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை தரிசனம் செய்யுங்கள்.

The post மனதுக்கு இதம் தரும் மார்கழி தரிசனம்.. appeared first on Dinakaran.

Tags : Mahavishnu ,Margazhi ,
× RELATED மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்