×

லாரி மீது கார் மோதியதில் எஸ்ஐ உள்பட 3 பேர் பலி

பல்லாவரம்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில் பம்மல், சங்கர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்.ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி பகுதியை சேர்ந்தவர் ராகவன் (54). இவருக்கு பாண்டீஸ்வரி (50) என்ற மனைவியும், பிரகாஷ் (24) என்ற மகனும், அக்ஷயா (22) என்ற மகளும் உள்ளனர். ராகவன், சென்னை அசோக் நகர் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி, பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், ராகவன், தனது மனைவி பாண்டீஸ்வரி, மகள் அக்ஷயா, மைத்துனர் சரவணன், உறவினர் ராஜேஷ் ஆகிய 5 பேருடன், நேற்று காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தார். உறவினர் ராஜேஷ் காரை ஓட்டினார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதூர் அருகே சென்றபோது, திடீரென நிலை தடுமாறி கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காவல் உதவி ஆய்வாளர் ராகவன், அவரது மைத்துனர் சரவணன், காரை ஓட்டி வந்த உறவினர் ராஜேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பாண்டீஸ்வரி மற்றும் மகள் அக்ஷயா ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த ராகவன் 1993ம் ஆண்டு முதலில் காவலராக பணியில் சேர்ந்து, பின்னர் படிப்படியாக உயர்ந்து உதவி ஆய்வாளராக பணியாற்றினார். கடந்த ஜனவரி மாதம் முதல் பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post லாரி மீது கார் மோதியதில் எஸ்ஐ உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : SI ,PALLAWARAM ,CHENNAI ,BAMMAL ,SANKAR NAGAR POLICE STATION ,TRICHI NATIONAL ,Ragavan ,Ramanathapuram district, Perunazhi ,Pandeiswari ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...