×

செம்பரம்பாக்கம் ஏரியில் பரபரப்பு தலை துண்டிக்கப்பட்ட ஆண் சடலம் மீட்பு: மற்ற உடல் பாகங்களையும் வெட்டி வீச்சு, போலீசார் தீவிர விசாரணை

குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் உடல் சிதைந்து கால், கை, தலை இல்லாத நிலையில் ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் 30வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, அப்பகுதி மக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஏரியில் இறங்கி மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொலை செய்த பிறகு, உடலில் இருந்து தலை, கை, கால்கள் போன்ற உறுப்புகளை மர்ம கும்பல் வெட்டியதும், போலீசார் கையில் சிக்காமல் இருப்பதற்காக உடலில் பெரிய கல்லை கட்டி ஏரியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், தண்ணீரில் இறங்கி வெட்டப்பட்ட தலை, கை, கால் போன்ற உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

போலீசாரின் நீண்டநேர தேடுதலுக்கு பிறகு, உடல் கண்டெடுக்கப்பட்ட சிறிது தூரத்தில் இருந்து ஒரு கால் மட்டும் மீட்கப்பட்டது. மேலும், உடலின் மற்ற பாகங்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மீட்கப்பட்ட உடல் மற்றும் கைப்பற்றப்பட்ட கால் ஆகியவற்றை, போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை நடந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதனால் அவர் கொலை செய்யப்பட்டார்?

வேறு எங்காவது கொலை செய்துவிட்டு உடலை மட்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் வீசிச் சென்றனரா? அல்லது ஏரிக்கரைக்கு நைசாக பேசி வரவழைத்து கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் வயிற்றில் கத்தியால் குத்தி குடல் சரிந்த நிலையில் தலை, கை, கால் இல்லாத வாலிபர் ஒருவரது உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் பரபரப்பு தலை துண்டிக்கப்பட்ட ஆண் சடலம் மீட்பு: மற்ற உடல் பாகங்களையும் வெட்டி வீச்சு, போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Kunradthur ,Sembarambakkam lake ,Sirukalathur ,
× RELATED தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி