×

ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிந்தவர் விஜயகாந்த்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம்:
ஓ.பன்னீர்செல்வம்: சிறந்த நடிகராக மட்டுமல்லாது ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிந்தவர். அரசியலில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து மக்களின் நன்மதிப்பையும், தொண்டர்களுடைய ஆதரவையும் பெற்று தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் என்ற அந்தஸ்தில் உயர்ந்தவர் விஜயகாந்த். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

ஜி.கே.வாசன் (தமாகா): 2016ம் ஆண்டு தேர்தலில் 3வது அணியை உருவாக்கி கேப்டன் தலைமையில் தமாகா செயல்பட்டதை இந்த நேரத்தில் பெருமையோடு நினைவு கூற விரும்புகிறேன். ஒரு சிறந்த கலைஞர். உயர்ந்த அரசியல்வாதி. அதையும் தாண்டி நல்ல மனிதர். மனித நேயர். தமிழ் மக்களை விட்டு மறைந்து விட்டார்.

வேல்முருகன் (தவாக): ஏழை எளியவர்களின் பசி பிணியை போக்கிய மகத்தான மனிதன், அவரின் இறப்பு என்பது மிகப் பெரிய இழப்பாகும். சட்டமன்றத்தில் குழந்தைத்தனமான பேச்சுக்கள் இன்று என் நினைவில் நிற்கிறது. ஜாதி மதம் கட்சி அனைத்தையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் கண்ணீரை அஞ்சலியாக செலுத்தினர்.

கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்): விஜயகாந்த் மறைவு தமிழ் திரை உலகிற்கும் அரசியலுக்கும் ஒரு பேரிழப்பாகும். அரசியலில் தனிக்கட்சி தொடங்கி தமிழ்நாட்டு மக்களுக்காக பெரிதும் பாடுபட்டவர். எதிர்கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றினார். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி): பசியோடு யாரும் இருக்க கூடாது என நினைத்தவர். தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக கேப்டன் இருந்திருப்பார் என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை.

The post ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிந்தவர் விஜயகாந்த்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Jayalalithaa ,DMUDika ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...