×

பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்து சந்திரபாபுவுடன் கர்நாடக துணைமுதல்வர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு அழைப்பு?

திருமலை: பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்த கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆந்திராவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்க உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான ஜெகன்மோகன் தலைமையிலாான ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க சந்திரபாபு திட்டமிட்டுள்ளார்.

இதற்கேற்ப தனது சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டம் குப்பத்தில் நேற்று முன்தினம் முதல் சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார். இதில் பங்கேற்க ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் நேற்று முன்தினம் சந்திரபாபுநாயுடு வந்தார். அங்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் காத்திருந்து சந்தித்துள்ளார். அப்போது இருவரும் சுமார் 15 நிமிடங்கள் தனியாக சென்று பேசினர். இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த சந்திரபாபு, `டி.கே.சிவக்குமாருடன் எப்போதும் நல்ல நட்பு உள்ளது.

அவரை ஏதேச்சையாகத்தான் சந்தித்தேன். அரசியல் குறித்து பேசவில்லை’ என்றார். தொடர்ந்து சந்திரபாபு அங்கிருந்து குப்பம் தொகுதிக்கு காரில் சென்றார். இந்த சந்திப்பு எதிர்பாராமல் நடந்ததாக கூறப்பட்டாலும், சந்திரபாபுவின் வருகையை டி.கே.சிவக்குமார் எதிர்பார்த்து விமான நிலையத்தில் காத்திருந்து சந்தித்துள்ளார். அவர்கள் தனியாக சென்று அரசியல் கூட்டணி குறித்து சில தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும், இருவரும் மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாகவும் தெலுங்கு தேச நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர். இதனிடையே காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரிலேயே டி.கே.சிவக்குமார், சந்திரபாபுவை விமான நிலையத்தில் சந்தித்து சில தகவல்களை தெரிவித்ததாகவும் காங்கிரசார் சிலரும் தெரிவிக்கின்றனர்.

* சர்மிளாவுக்கு மாநில காங். தலைவர் பதவி?
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ருத்ரராஜு மற்றும் மாநில மூத்த நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் டெல்லி சென்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்களான ராகுல்காந்தி, மாணிக்தாக்ரே ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சியமைப்பது தொடர்பாக விவாதித்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி சேர்ந்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை சர்மிளாவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமி ப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

The post பெங்களூரு விமான நிலையத்தில் காத்திருந்து சந்திரபாபுவுடன் கர்நாடக துணைமுதல்வர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு அழைப்பு? appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Chandrababu ,Bengaluru airport ,Congress alliance ,Tirumala ,Karnataka ,TK ,Shivakumar ,Chief Minister ,Andhra Pradesh ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு