×

சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை: தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அறிக்கையில்; தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜய்காந்த் அவர்கள் நேற்று (28.12.2023) அதிகாலை 5.30 மணியளவில் இயற்கை எய்திய செய்தி கேட்டவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த வேதனை அடைந்தார்கள். உடனடியாக கேப்டன் விஜய்காந்த் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அவருடைய துணைவியாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

தமிழ் உணர்வும், தாராள மனமும் கொண்ட உன்னத மனிதர் கேப்டன்; எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படுகின்ற என்னுடைய அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டுக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பாகும் என்று இரங்கல் செய்தியில் முதலமைச்சர் ஆழ்ந்த வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்கள். அத்துடன் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவித்தார்கள்.

கேப்டன் விஜயகாந்தின் உடல், கோயம்பேட்டில் உள்ள அவரது தே.முதி.க.கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏற்பட்ட இடநெரிசலைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டபடி, இன்று காலை முதல் சென்னை தீவுத்திடலில் அவர் உடலை கொண்டு வந்து வைத்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து தந்தார்கள்.

முதலமைச்சர் அவர்கள், முன்னதாக மாநகராட்சி ஆணையர் அவர்களை தீவுத்திடலுக்கு அனுப்பி, கேப்டன் விஜயகாந்த் உடல் வைக்கப்படுவதற்கான இடத்தை தூய்மை செய்து, தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தியதன் பேரில், மாநகராட்சி ஆணையர் உடனடியாக நேரில் சென்று வேண்டிய வசதிகளைச் செய்து தந்தார். திரையுலக கலைஞர்கள் மற்றும் தே.மு.தி.க. கட்சித் தொண்டர்கள், அவரது உறவினர்கள் அனைவரும் சிரமமின்றி வந்து கேப்டன் விஜயகாந்திற்கு மரியாதை செலுத்துவதற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்கள்.

அந்த அடிப்படையில், காவல்துறையின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. அத்துடன், தீவுத்திடலிருந்து அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு தேவையான வாகன வசதிகளையும் முதலமைச்சர் ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள். தீவுத்திடலிலிருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.கட்சி அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லும் வழி முழுவதும் காவல் துறையின் முழு பாதுகாப்பு அளிக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மறைந்த பொழுது, அண்ணா நினைவிடம் அருகில், அவரை அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஏற்பட்ட இடையூறுகளை நினைவில்கொண்டு; கேப்டன் விஜயகாந்தின் உடல் தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்வதற்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, மாநகராட்சி ஆணையரால் உரிய அனுமதிகள் வழங்கிட முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்தார்கள்.

கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தினார்கள். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் பொழுது தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் அவருக்கு 21 குண்டுகள் முழங்கிட முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, அவர் ஒரு மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், ஒரு சகோதரருக்கு செய்யக்கூடிய கடமை என்ற உணர்வோடு, குறையேதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் அக்கறையுடன் முதலமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அனைவரும் பாராட்டுகின்றனர்.

The post சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை: தமிழ்நாடு அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Captain Vijayakanth ,Tamil Nadu Government ,Chennai ,Chief Minister ,MLA ,Vijayakanth ,K. Stalin ,Government of Tamil Nadu ,Vijaykanth ,National Progressive Dravitha Corporation ,Dinakaran ,
× RELATED வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’...