×

எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா?

எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா?

மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு கர்ணனை எமன் அழைத்து சென்றார். பூவுலகில் உனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், கேட்டவர்களுக்கு கேட்டதை கொடுத்தாய். அதனால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்வாய்’’ என கர்ணனிடம் எமன் கூறினான். கர்ணனும் சொர்க்கத்தில் வசிக்க தொடங்கினான். ஒரு நாள், கர்ணனுக்கு பசி ஏற்படுகிறது. அங்கிருப்பவர்களிடம் உணவு கிடைக்கும் இடம் பற்றி கேட்கிறார். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சொர்க்கத்தில் வசிப்பவர்களுக்கு பசிக்காது. அதனால் உணவுக்கு இங்கு வேலையில்லை என்றனர். ஆனால், கர்ணனால் பசிதாங்க முடியவில்லை. உடன் தேவ குரு பிரகஸ்பதியிடம் கேட்கிறான், கர்ணன். அவர் கர்ணனிடம், ‘‘உன் ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சுவை’’ என்கிறார். அவனும் சுவைத்தான், பசி அடங்கியது. இது பற்றி பிரகஸ்பதியிடம் கேட்டான் கர்ணன். “கர்ணா, நீ வள்ளல்தான். யார் எது கேட்டாலும் கொடுத்தாய். ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை.

அதனால்தான் உனக்கு இங்கு பசி ஏற்பட்டது. பூவுலகில் நீ இருந்தபோது, ஒருநாள் ஒரு ஏழை உன்னிடம் சாப்பாடு எங்கு கிடைக்கும் என பசியுடன் கேட்டான். அதற்கு நீ, அவனுக்கு உணவு வழங்காமல் உணவு கிடைக்கும் இடத்தை உன் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினாய். அந்த புண்ணியத்தின் பலன்தான் இப்போது ஆள் காட்டி விரலை நீ உன் வாயில் வைத்தவுடனே, உன் பசி அடங்கியது’’ என்றார் பிரகஸ்பதி. கர்ணன் கண்ணீர் மல்க எமதர்மனிடம் சென்றான்.

“எமதர்மா… நான் பூவுலகுக்கு சென்று அன்னதானம் செய்ய வேண்டும். நான் பூமிக்கு 15 நாள் செல்ல அனுமதி வேண்டும்’’ என வரமாகக் கேட்டான். எமதர்மனும் அனுமதித்தார். பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில், அன்னதானம் செய்தான் கர்ணன்.

15 நாள் முடிந்த பின் மீண்டும் எமலோகத்துக்கு கர்ணன் சென்றான்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சிறுகதையும், அருள் மொழியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம்
எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை. பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை என்று முறையிட்டனர் கோயில் பணியாளர்கள். இதைக் கேட்ட பரமஹம்சர் சொன்னார்; இன்றைக்குக் கோயில் வாசலிலே ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு வைத்துவிடுங்கள் அப்புறம் எறும்புகள் உள்ளே வராது. அதன் படியே கோயில் வாசலில் சர்க்கரை போட்டதும், எறும்புகளெல்லாம் மொய்த்துவிட்டு அப்படியே திரும்பிப் போய்விட்டன.

கோயிலுக்குள் வரவில்லை. உள்ளே விதவிதமாக பிரசாதங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த எறும்புகள் வாசலில் இருக்கிற சர்க்கரையை மட்டும் மொய்த்து விட்டுத் திரும்பிப் போய்விட்டனவே! என்று எல்லாரும் ஆச்சர்யப்பட்ட போது, பரமஹம்சர் சொன்னார்; எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான். மனிதர்களும், வாழ்க்கையில் உயரிய லட்சியமெல்லாம் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நடுவிலே கிடைக்கிற அற்ப சந்தோஷத்துக்கு மயங்கி முன்னேறாமலேயே இருந்துவிடுவார்கள். அப்படி இல்லாது முன்னேறிச் செல்ல வேண்டும்.

லிங்கோத்பவரை வணங்கினால் குற்றங்களும் மறைந்துவிடும்

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால், நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்துவிடும். இனி குற்றம் செய்யும் எண்ணமும் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது. மேலும், இவரை வணங்க சூரிய கிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்னைகளும் விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post எமனிடம் கர்ணன் கேட்ட வரம் என்ன தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Karna ,Eman ,Mahabharata war ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!