×

ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பிரியாவிடை!!

சென்னை :தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். இதையடுத்து பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு பிறகு விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்நிதி,ஸ்ரீகாந்த், லிவிங்ஸ்டன், ராம்கி, ராதாரவி, சாந்தனு, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ்,எம்.எஸ்.பாஸ்கர், தாமு, இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, இயக்குனர்கள் மிஷ்கின், பாக்யராஜ், சுந்தர் சி, பார்த்திபன், அரசியல் தலைவர்கள் ஓபிஎஸ், சீமான், ஜி.கே.வாசன், மேயர் பிரியா, அமைச்சர் ரகுபதி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், “விஜயகாந்தின் மறைவு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள். விஜயகாந்த் கோபத்துக்கு பின்னால் நியாயமான ஒரு காரணம் இருக்கும். விஜயகாந்த் தைரியத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமானவர். விஜயகாந்த் நட்புக்கு இலக்கணமானவர், சுயநலமில்லாதவர்.கேப்டன் என்பது விஜயகாந்துக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்தின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த் போன்றோர்தான்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஒரு முறை பழகினால் விஜயகாந்தின் அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பிரியாவிடை!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Rajinikanth ,Chennai ,Demudika ,Coimbed ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது