×

மக்கள் மனதில் விஜயகாந்த் என்றென்றும் நிலைத்திருப்பார்: திமுக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் புகழஞ்சலி..!!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை முன்பு நலம்பெற வேண்டி காத்திருந்த தொண்டர்கள் கேப்டன்… கேப்டன்… என கதறி அழுதனர். விஜயகாந்த் காலமானாதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கள், அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

அமைச்சர் அன்பில் மகேஷ்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர். மனிதநேய பண்பாளர், தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்தினார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், சிறந்த திரைக்கலைஞரும், எங்கள் மதுரை மண்ணின் மைந்தருமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு.விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறேன் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர், அனைவராலும் அன்புடன் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டவருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு. விஜயகாந்த் அவர்கள் இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் மனம் வருந்துகிறேன். திரையுலகிலும், பொதுவாழ்விலும் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்கள் மற்றும் அவரது அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்: நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், விஜயகாந்த் தமிழ் சினிமாவில் இருந்த ஒரு சிறந்த நடிகர். அவர் தனது பன்முகத்தன்மை மற்றும் சிறப்பான நடிப்பால், ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தினார். எப்போதும் மக்களின் குரலாக இருந்தவர். மாநில அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பும் இதுவே. ஆகவே, மக்கள் மனதில் விஜயகாந்த் என்றென்றும் நிலைத்திருப்பார். இந்த இக்கட்டான நேரத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் மோகன்லால்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி, கனிவான மனிதர் விஜயகாந்த் என்றும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

The post மக்கள் மனதில் விஜயகாந்த் என்றென்றும் நிலைத்திருப்பார்: திமுக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் புகழஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Mahesh ,Dima ,South ,India ,Chennai ,Temuthiga ,Chennai Miad Hospital ,KATHARI ,South India ,
× RELATED ஆவடி சித்த மருத்துவர் மற்றும் அவரது...