×

டாஸ்மாக் கடையில் தகராறு: பீர் பாட்டிலால் விற்பனையாளரின் மண்டையை உடைத்த 3 பேர் கைது


மரக்காணம்: டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி மண்டையை உடைத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் திண்டிவனம் சாலையில் பக்கிங்காம் கால்வாய் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் நேற்று இரவு வழக்கம் போல் விற்பனையாளர் நீலமேகம் (44) மதுபானங்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அப்போது போதையில் வந்த மூன்று வாலிபர்கள் மரக்காணம் டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் கேட்டுள்ளனர். விற்பனையாளர் நீலமேகம் பீர் பாட்டிலை கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தை கேட்டுள்ளார்.

குடி போதையில் இருந்த நபர்கள் புதுவை மாநிலத்தில் பீர் விலை குறைவாக உள்ளது நீ ஏன் அதிக விலை கேட்கிறாய் என கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நீலமேகத்திற்கும் குடிபோதையில் வந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மூன்று பேரில் ஒருவர் தன் கையில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து டாஸ்மாக் ஊழியர் நீலமேகத்தின் தலையில் அடித்துள்ளார். இதில் நீலமேகத்தின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த டாஸ்மாக் ஊழியரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர்களை மீட்டு மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை தாக்கிய விக்னேஷ் (24) விக்னேஷ் குமார் (26) ராஜ்குமார்(29) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

The post டாஸ்மாக் கடையில் தகராறு: பீர் பாட்டிலால் விற்பனையாளரின் மண்டையை உடைத்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Marakanam ,Buckingham canal ,Marakkanam Tindivanam road ,Villupuram district ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...