×

இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு சிசிடிவி பதிவுகள் மூலம் 2 வாலிபர்கள் மீது சந்தேகம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காசா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஒன்றிய பாஜ அரசு கொண்டுள்ளது. சமீபத்தில் அரபிக்கடல் மற்றும் செங்கடலில் இந்தியா நோக்கி வந்த 2 வணிக கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று முன்தினம் நடந்த குறைந்த சக்தி கொண்ட குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாணக்யாபுரி பகுதியில் உள்ள தூதரகத்தின் காலி இடத்தில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பால் யாரும் காயமடையவில்லை.

இந்த விவகாரம் குறித்து பல்துறை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) மற்றும் தடயவியல் நிபுணர்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். ரசாயன குண்டுவெடிப்பாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அங்குள்ள மர இலைகள் மற்றும் புல் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரும், மாநில போலீசாரும் இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். அங்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் குண்டுவெடிக்க சிறிது நேரத்திற்கு முன்பாக அவ்வழியாக 2 வாலிபர்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கொடியுடன், இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் அப்பகுதியில் செயல்பாட்டில் இருந்த அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் முற்றிலும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து இஸ்ரேல் தூதரத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு புத்தாண்டு தினம் வருவதாலும் டெல்லி எல்லையில் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

* நாடாளுமன்ற சம்பவத்திற்கு தொடர்பா?
இஸ்ரேல் தூதரகம் மீதான குண்டுவெடிப்புக்கும் நாடாளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு சிசிடிவி பதிவுகள் மூலம் 2 வாலிபர்கள் மீது சந்தேகம்: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,Delhi New Delhi ,Israeli ,Embassy ,Delhi ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...