×

ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடனா? வெட்கக்கேடு… திகார் சிறை ஓபிஎஸ்சுக்கு ரெடி…எடப்பாடி பதிலடி

கோவை: ‘திகார் சிறைக்கு ஓபிஎஸ் போக தயாராகிறார். அவர் சிறைக்கு செல்வது உறுதி’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு நிதி கொடுக்காதது தவறு என்று சொல்கிறோம். அதிமுக-பாஜ கூட்டணி கிடையாது என சொல்லி விட்டோம். இது எங்கள் கட்சி பிரச்னை. உங்களுக்கு ஏன் பதட்டம்?. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு தகுந்தவாறு இருக்கும். 66 இடங்களில் அதிமுக எம்எல்ஏ வெற்றி பெற்று இருக்கின்றனர். திகார் சிறைக்கு ஓபிஎஸ் போக தயாராகிறார். அவர் வழக்குகள் விசாரணைக்கு வர இருக்கிறது. என் மீது ஏதாவது பழியை சொல்லி தப்பிக்க பார்க்கின்றார்.

ஜெயலலிதாவுக்கு இரண்டு கோடி கடன் கொடுத்தாராம் ஓபிஎஸ். வெட்கக்கேடானது. இது மோசமான வார்த்தை. ஓபிஎஸ் இடையில்தான் கட்சிக்கு வந்தார். போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு ஏஜென்டாக இருந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவிற்கு எதிராக வேலை பார்த்தவர். ஓபிஎஸ் என் மீது ஏதாவது சொல்லட்டும். என்ன ரகசியம் என்றாலும் சொல்லட்டும். எறும்பு ஏரோ பிளேன் ஓட்டும் என கிராமத்தில் சொல்வார்கள். பல வழக்குகளை ஓபிஎஸ் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார். பல வழக்குகளில் அவர் சிறைக்கு செல்வது உறுதியாகிவிட்டது. ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நிதியை வழங்கிட வேண்டும். 1974-ல் இருந்து இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் நாங்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

* பண பலத்தால் அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டார்: ஜெயலலிதா திட்டங்களை சிதைத்தவர் எடப்பாடி; ஓபிஎஸ் வேதனை
ஊட்டி: பண பலத்தால் அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என ஊட்டியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது: பண பலத்தை வைத்து கொண்டு கட்சியை கபளீகரம் செய்துவிட்டார் எடப்படி பழனிச்சாமி. கழக விதியை மாற்றியமைத்துதான் பொதுச்செயலாளராக ஆகிவிட்டார். பணம் படைத்தவர்கள் மட்டுமே தற்போது பதவியில் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலனுக்காக தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்தார். சமூக பாதுகாப்பு திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்தனர். ஆனால், எடப்பாடி ஆட்சிக்கு வந்த பின், இத்திட்டங்களின் நோக்கத்தை சிதைத்துவிட்டார். இதனால், எடப்பாடி தலைமை ஏற்ற பின்பு, நடந்த 9 சட்டமன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்வியை மட்டுமே கண்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

* கொடநாடு வழக்கில் துளியும் தெரியாது
ஓபிஎஸ் கூறுகையில், “கொடநாடு கொலை வழக்கில் எனக்கு துளியும் தெரியாது. எனக்கு அதில் எந்த சம்மந்தமும் கிடையாது. எனவே, தவறு செய்தவர்கள் யார்? என்று விரைவில் தெரியவரும். எடப்பாடி விரைவில் கைது செய்யப்படுவார்’’ என்றார்.

The post ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி கடனா? வெட்கக்கேடு… திகார் சிறை ஓபிஎஸ்சுக்கு ரெடி…எடப்பாடி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Dikar ,Edappadi ,Govai ,OPS ,Edappadi Palanisami ,Secretary General ,Opposition Leader ,Edapadi Palanichami ,Palanichami Goa Airport ,EU government ,Dinakaran ,
× RELATED அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி என்ற...