×

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் போலீசார் சோதனை


சேலம்: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவரது வீடு, அலுவலகங்களில் போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. ஜெகநாதனின் அறை, இல்லம் , விருந்தினர் விடுத்தி, பதிவாளர் அலுவலகம், இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று கைது செய்யப்பட்டார். பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் துணைவேந்தர்ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். சேலம் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார். பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பூட்டர் என்ற தனி நிறுவனம் தொடங்கியுள்ளார். துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டே தனியார் நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழக நிதியில் முறைகேடு செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றார். பல்கலைக்கழகத்தில் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

குறிப்பாக, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு காவி வண்ண ஒளி விளக்குகளை ஒளிரவிட்டதுடன், மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்த பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து மாநில அரசின் கொள்கைகளுக்கும், தொழிலாளர்கள் மற்றும் மாணவர் நலனுக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இதழியல் துறை பேராசிரியர் சுப்பிரமணி என்பவர், பெரியாரின் போராட்டங்கள் குறித்து, `பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது சர்ச்சையானது.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குநர்களாக கொண்ட, பூட்டர் பவுண்டேசன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுத்துப்படுவதுடன், பல்கலைக்கழக வளங்களை அவர்களுக்கு தாரைவார்ப்பதாக சர்ச்சை எழுந்தது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, துணைவேந்தர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பல்கலைக்கழக சாசன விதிகளுக்கும், அரசு விதிகளுக்கும் எதிரானது என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியருமான இளங்கோவன் (73) என்பவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதியில்லாமல், துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில், பெரியார் பல்கலைக்கழக நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால், பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகனுக்கு, கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோன்மணி, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை, கருப்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் துணைவேந்தர் மீது பணமோசடி, ஆபாசமாக பேசுதல், சாதி பெயரைக்கூறி திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார். துணைவேந்தர் ஜெகநாதன் உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து இன்று சேலம் கருப்பூர் போலீசார் அவருக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Vice Chancellor ,Jaganathan ,Salem ,Vice-Chancellor ,Jagannathan ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...