- அதிமுக பஞ்சாயத்து தலைவர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சந்தடி
- ஆர்.கே. பத்தா
- பள்ளிப்பட்டு
- அதிமுக பஞ்சாயத்து ஊராட்சி
- ஜனாதிபதி
- தின மலர்
பள்ளிப்பட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த அரசு பள்ளி கட்டிடத்திற்கு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பூட்டு போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் பூட்டை உடைத்து திறந்து திறப்பு விழா நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சின்னநாகபூண்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்ட, ஒப்பந்ததாரர் சுப்பிரமணி சார்பில் ஊராட்சி மன்ற அதிமுக தலைவர் பார்த்திபன் பணிகள் செய்தார். பள்ளி கட்டிடப் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில் ரூ.10 லட்சம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டி உள்ளதாகவும் இருப்பிடம் ஒப்பந்ததாரர் தொகையை செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
புதிய பள்ளி கட்டிடத்தின் மீது வெள்ளிக்கிழமை அதிமுக அலுவலகம் என்று ஊராட்சி மன்ற தலைவர் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே நேரத்தில், ஊராட்சி மன்ற தலைவரின் பண பரிவர்த்தனை உரிமம் ரத்து செய்யப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பள்ளி கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் கிரிஜா, வெங்கடேசுலு, வருவாய் ஆய்வாளர் பாண்டியன் உள்பட அரசு அதிகாரிகள் சென்றனர்.
ஆனால், பள்ளி கட்டிட கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் நீண்ட நேரம் அவர்கள் காத்திருந்தனர். இருப்பினும் ரூ.10 லட்சம் தொகை செலுத்தினால் மட்டுமே பள்ளி கட்டிடத்தின் சாவி ஒப்படைக்கப்படும் என்று அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கூறியதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் காத்திருந்தும் பள்ளி கதவுகள் திறக்கப்படாத நிலையில், உதவி காவல் ஆய்வாளர் சிவா மற்றும் போலீசார் பாதுகாப்புடன் பள்ளி கதவுகளின் பூட்டை உடைத்து திறப்பு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிலையில், முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த அரசு பள்ளி கட்டிடத்திற்கு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த அரசு பள்ளி கட்டிடத்தை பூட்டிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்: போலீஸ் உதவியுடன் பூட்டு உடைப்பு; ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.