- ஆர்பிஐ
- நிர்மலா சீதாராமன்
- மும்பை
- மத்திய நிதி அமைச்சர்
- ரிசர்வ் வங்கி
- கவர்னர்
- சக்தி காந்த தாஸ்
- தின மலர்
மும்பை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், ரிசர்வ் வங்கி, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசி வங்கிகளில் 11 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாசுக்கு நேற்று காலை 10.50 மணிக்கு இ-மெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்து. அதில் ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலக கட்டிடம், சர்ச்கேட்டில் உள்ள எச்.டி.எப்.சி ஹவுஸ், பாந்த்ரா குர்லா காம்பிளக்சில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி டவர் ஆகிய இடங்களில் மொத்தம் 11 வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த குண்டுகள் பகல் 1.30 மணி முதல் அடுத்தடுத்து வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கடிதத்தில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும், வங்கி ஊழல் தொடர்பான எப்.ஐ.ஆர். விபரம் முழுவதும் அறிக்கையாக வெளியிடப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தகவலறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் ரிசர்வ் வங்கி உட்பட 3 வங்கிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து ரிசர்வ் வங்கி அதிகாரி கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
The post நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்யக் கோரி ரிசர்வ் வங்கிக்கு குண்டு மிரட்டல்: மர்ம ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.