×

விபத்தில் சிக்கிய தம்பதி, குழந்தையை மீட்ட கலெக்டர்: காரில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார்

வாலாஜா: வாலாஜாவில் பைக் விபத்தில் சிக்கிய தம்பதி மற்றும் அவர்களது குழந்தையை கலெக்டர் வளர்மதி மீட்டு, தனது காரில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(37), டிரைவர். இவரது மனைவி பரிமளா(27). இவர்களது மகள் ஓவியா(7). நேற்று ரமேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் பைக்கில் ராணிப்பேட்டைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்‌. ராணிப்பேட்டை பாலாற்று மேம்பாலம் வழியாக சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ திடீரென இவர்களது பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி ரமேஷ் உட்பட 3 பேரும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.

அப்போது, அவ்வழியாக கலெக்டர் வளர்மதி காரில் வந்து கொண்டிருந்தார். விபத்து நிகழ்ந்திருப்பதை பார்த்ததும் கீழே இறங்கி விசாரித்தார். பின்னர், படுகாயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்த ரமேஷ், அவரது மனைவி பரிமளா, மகள் ஓவியா ஆகிய 3 பேரையும் மீட்டு தனது காரில் ஏற்றிக்கொண்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். சிறிது தூரம் சென்றதும் அங்கு வந்த ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு காரில் பின்தொடர்ந்து சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் டாக்டர்கள் உரிய முதலுதவி சிகிச்சை அளித்தனர்.அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கலெக்டர் வளர்மதி கேட்டறிந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையிலேயே காத்திருந்த கலெக்டர் அவர்கள் 3 ேபரும் நலமாக இருப்பதை அறிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கலெக்டரின் இந்த மனிதாபிமான செயல் அங்கிருந்த அனைவரும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post விபத்தில் சிக்கிய தம்பதி, குழந்தையை மீட்ட கலெக்டர்: காரில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார் appeared first on Dinakaran.

Tags : Walaja ,Varamati ,
× RELATED சேப்பாக்கம் மைதானம் அருகே...