×

திருப்பதியில் ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்கவாசலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கான டோக்கன்கள் காலி: 4.25 லட்சம் பக்தர்கள் பெற்று சென்றனர்

திருமலை: திருப்பதியில் ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான 4.25 லட்சம் இலவச டோக்கன்களை பக்தர்கள் நேற்று அதிகாலை வரை பெற்று சென்றுவிட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 23ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 1ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஏற்கனவே ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியில் 9 இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு 4.25 லட்சம் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் வரும் 1ம் தேதி வரையில் சுவாமி தரிசனம் செய்ய டோக்கன்கள் அனைத்தும் நேற்று அதிகாலை 4.30 மணி வரை பக்தர்கள் பெற்று சென்றனர். இதனால் தற்போது இலவச டோக்கன்கள் வழங்கும் கவுண்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. எனவே இலவச டோக்கன்கள் பெறுவதற்காக பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம். எந்த வித தரிசன டோக்கன்களும் திருப்பதி மற்றும் திருமலையில் வழங்கப்படாது. எனவே டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு வர வேண்டும். டோக்கன் இல்லாமல் திருப்பதிக்கு வந்தால் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஒரே நாளில் ரூ.5 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியான நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 63 ஆயிரத்து 519 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 26 ஆயிரத்து 424 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர். மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் பக்தர்கள் ரூ.5.05 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

The post திருப்பதியில் ஜனவரி 1ம் தேதி வரை சொர்க்கவாசலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கான டோக்கன்கள் காலி: 4.25 லட்சம் பக்தர்கள் பெற்று சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,mountain elephants ,Sorkavasal ,Tirumala ,Seven Mountain Elephants ,Gate of Paradise ,Gate of Heaven ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!