×

குமரியில் மீண்டும் வெயில் கொளுத்தியது: பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 

நாகர்கோவில், டிச.25: பெருஞ்சாணி அணையில் மறுகால் ஷட்டர்கள் மூடப்பட்டு பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் மளமளவென நிரம்பின. மலையோர பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே உச்சநீர்மட்டத்தை எட்டியிருந்த அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அணைகளில் இருந்து மறுகாலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

கடந்த சில நாட்களாக மழை குறைந்த நிலையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இந்தநிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 397 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணை நீர்மட்டம் 75.38 அடியாக இருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.60 அடியாகும். அணைக்கு 515 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 514 கன அடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டிருந்தது.

சிற்றார்-1ல் 16.73 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார்-2ல் 16.83 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 19.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு 7 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 7 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. முக்கடல் அணை நீர்மட்டம் 25 அடியாகும். அணைக்கு 9.3 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 8.6 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

The post குமரியில் மீண்டும் வெயில் கொளுத்தியது: பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Perunjani Dam ,Nagercoil ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி...