கரூர், டிச. 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக சாலை பராமரிப்பு இன்றி உள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருவதால் சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ராயனூர் இடையே ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பகுதிகளாக எம்ஜிஆர் நகர், வெங்கடேஷ்வரா நகர் பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளை சுற்றிலும் உள்ள மற்ற சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு அந்த பகுதியில் எளிதான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பகுதி சாலைகள் மட்டும் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளதால் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதன் காரணமாக இரண்டு சக்கர வாகனங்கள் இந்த தெரு பகுதியை எளிதில் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நடந்து செல்லக்கூட லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த வெங்கடேஷ்வரா நகர்ப் பகுதி சாலைகளை மக்கள் நலன் கருதி விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தாந்தோணிமலை பகுதியில்10ஆண்டுகளாக பராமரிக்கப்படாத சாலையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.