×

ஊரப்பாக்கம் அருகே காயலான் கடைக்காரர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் துணிகரம்

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே பட்டப்பகலில் காயலான் கடைக்காரர் வீட்டு வாசலில் ஜல்லி கற்கள் நிரப்பிய வெடிகுண்டுகளை வீசிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு துரை (29). இவர் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலையோரத்தில் குடியிருந்து வருகிறார். இதில் வீட்டை ஒட்டியபடி அவர் காயலான் கடையும் அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில், பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர் காயலான் கடை மற்றும் வீட்டு வாசலில் ஜல்லி கற்களை வைத்து தயாரித்த 2 வெடிகுண்டுகளை வீசினர். அதில் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

மற்றொன்று வெடிக்கவில்லை. இதனை கண்டதும் சுயம்புதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்ஐ தனசேகர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெடிக்காத ஒரு குண்டை மீட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டியில் காயலான் கடைக்காரரை அச்சுறுத்துவதற்காக இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து வெடிகுண்டுகளை வீசிவிட்டு பைக்கில் ஏறி தப்பிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊரப்பாக்கம் அருகே காயலான் கடைக்காரர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Kayalan ,Oorpakkam ,Kuduvancheri ,
× RELATED கூடுவாஞ்சேரி அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டை மீட்க கோரிக்கை